செய்திகள் (Tamil News)

முதல்-அமைச்சராகும் தகுதி எனக்கு உள்ளது: திருநாவுக்கரசர்

Published On 2018-07-03 04:25 GMT   |   Update On 2018-07-03 04:25 GMT
தமிழகத்தில் முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி தனக்கு உள்ளதாக நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #congress #Thirunavukkarasar
பண்ருட்டி:

கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நெய்வேலி இந்திராநகரில் உள்ள எஸ்.பி.டி.யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவன் உங்களை நோக்கி வந்திருக்கிறது. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருந்தது தற்போது அண்ணா தி.மு.க பிளவு பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல் விட்ட பணியை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கு உள்ளது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோர் நடிகர்களாக இருந்து கட்சி தொடங்கி முதல்-அமைச்சர்களாக ஆனார்கள். ஆனால் அதன் பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லை, எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்சி நடைபெறுகிறது.


இந்த ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளை சந்திக்க வேண்டும். கட்சியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை.

மத்திய அரசை மாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்.

இவ்வாறு அவர் பேசினார். #congress #Thirunavukkarasar
Tags:    

Similar News