தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்: டி.டி.வி. தினகரன் பேட்டி
திண்டுக்கல்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோமா நிலையில் உள்ளது. இந்த ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. சத்துணவு முட்டையில் மட்டும் ஊழல் இல்லை. எல்.இ.டி. பல்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.
அமைச்சர் தங்கமணி பொய்யான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த வெற்றியை போல வருகிற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதியிலும், சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.
அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக உருவெடுப்போம். மத்திய அரசு தமிழக அரசை ஊழல் ஆட்சி என குற்றம் சாட்டுகிறது. ஆனால் எதற்காக ஆட்சி நடைபெற அனுமதிக்கிறது என தெரிய வில்லை. இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சி அமைக்க முடியாது.
லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத பாம்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவையில் பலியான மாணவி வழக்கு தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள். கோவையில் போலி நிறுவனங்கள் தொடங்கி அரசு டெண்டர் எடுத்து வருகின்றனர். 8 வழிச்சாலை மக்களுக்கான திட்டம் கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த தேவைக்காக நிறைவேற்ற துடிக்கின்றனர்.
இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் சமயத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #Corruption #edappadipalanisamy