கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது
- போலீசார் கோவை ஜங்சன், ரோபர்ஸ்டன் ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
- 46 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை புறநகர் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை ஆர்.எஸ். புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கோவை ஜங்சன், ரோபர்ஸ்டன் ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது48) அந்த பகுதியில் பெட்டி கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு குட்காவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாஸ்கரனை கைது செய்து அவரிடம் இருந்து 26 பாக்கெட் குட்காவை, பறிமுதல் செய்தனர். இதேபோன்று கோவை கெம்பட்டி காலனி பகுதியில் குட்கா பதுக்கி விற்ற சிவக்குமார் 44 என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 20 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர்.