குடிபோதையில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
- டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
- 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது48).
இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார்.
பஸ் கலிக்கநாயக்கன்பாளையம் அருகே வளைவில் சென்ற போது 3 பேர் மது போதையில் சத்தம் போட்டபடி நடுரோட்டில் வந்ததனர்.
இதனை பார்த்த டிரைவர் விஜயகுமார் ஹாரன் அடித்தார். ஆனால் அவர்கள் ரோட்டை விட்டு விலகாமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் டிரைவர் மற்றும் கண்டெக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
காயம் அடைந்த டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோர் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.