உள்ளூர் செய்திகள்

கோவையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-07 09:04 GMT   |   Update On 2023-06-07 09:04 GMT
  • வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றுகின்றனர்.
  • 70 போதை மாத்திரைகள், ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை மாநகரில் வாலிபர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக, பெரிய கடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் போதை மருந்து, ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவர்களை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள் கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பி (எ) அக்பர் அலி (வயது 27), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தொழிலாளி ரியாஷ் கான் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றி, ஊசி மூலம் உடம்பில் செலுத்துவது தெரிய வந்தது.

எனவே போதை மாத்திரை, மருந்துகள் விற்றதாக, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 70 போதை மாத்திரைகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணசாமி ரோட்டில் கஞ்சா விற்றதாக, தெற்கு உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த மீன் கடை தொழிலாளி ஷாஜகான் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News