சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
- ஒப்பந்ததாரர் சுப்பிரமணி- தொழிலாளிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம்
- போலீசார் சுரேஷ், ஆனந்தை மீண்டும் கைது செய்தனர்
அருவங்காடு,
குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த ஆண்டு சின்ன கரும்பாலம் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இதில் கட்டுமான பணியில் சுரேஷ், ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்தப் பணியின் மேற்பார்வையாளராக சரவணன் என்பவர் இருந்தார் இதில் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாததால் ஒப்பந்ததாரர் சுப்பிரமணிக்கும், தொழிலாளிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் சுப்பிரமணி குன்னூர் போலீசில் புகார் செய்ததன் பேரில் சுரேஸ் (வயது36), ஆனந்த் (வயது 40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மீண்டும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல வந்த மேற்பார்வையாளர் சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் மேலும் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் மீண்டும் சுரேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.