செய்திகள் (Tamil News)

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-09-17 03:09 GMT   |   Update On 2016-09-17 03:09 GMT
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.கலைமதி நேற்று தீர்ப்பு அளித்தார்.
சென்னை:

சென்னை செகரட்டேரியட் காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 49). அதே பகுதியில் வசிக்கும் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை இவரது வீட்டிற்கு அடிக்கடி விளையாட செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி வீட்டிற்கு வந்த அந்த குழந்தைக்கு முனுசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது குழந்தையை தேடி சென்ற பெற்றோர் இதை பார்த்துவிட்டனர்.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்த பெற்றோர், இதுகுறித்து செகரட்டேரியட் காலனி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனுசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.கலைமதி, பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் முனுசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும் அந்த தீர்ப்பில், ‘அண்மை காலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. முனுசாமி குடிபோதையில் இந்த வக்கிர செயலில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற மனிதர்களின் செயலால் மனிதாபிமானம் சமுதாயத்தில் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது’ என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Similar News