செய்திகள் (Tamil News)

ஆரோவில் அருகே வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு

Published On 2016-09-27 12:02 GMT   |   Update On 2016-09-27 12:02 GMT
ஆரோவில் அருகே வீடு புகுந்து 8 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை ஜெய் நகரில் வசித்து வருபவர் அம்பிகாபதி (வயது 65). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.

அங்கு மகளை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் மாலை மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பின்பக்க ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் நகை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News