புதுக்கோட்டை அருகே பஸ் நிலையத்தில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் விலக்கு சாலை பேருந்து நிலையத்தில் துணிப்பை ஒன்று கிடந்தது . அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குநின்ற பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது, துணிப்பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த குழந்தையை அங்கு போட்டு விட்டு சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை. தகாத உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை அங்கு போட்டு சென்றாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.