மெரினா கடற்கரைக்கு காதலியுடன் சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு
சென்னை:
அம்பத்தூர் அத்திப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் நேற்று இரவு தனது காதலியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார், விவேகானந்தர் இல்லம் எதிரில் இருவரும் கடற்கரை மணில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை கேட்டனர். ஆனால் வினோத்குமார் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் வினோத்குமாரை சரமாரியாக கத்தியால் தலையில் வெட்டினர்.
பின்னர் வினோத் குமாரிடம் இருந்த செல்போன் மற்றும் மணிபர்சை பறித்துக் கொண்டு அந்த கும்பல் வினோத்குமாரின் காதலியையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மெரினா போலீசார் விரைந்து வந்து வினோத்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாட்டாங்குப்பத்தை சேர்ந்த சதீஷ்குமார், குமாரவேல், பிரேம்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.