செய்திகள் (Tamil News)

அரியலூர் அருகே கிணற்றில் விவசாயி பிணம்

Published On 2017-04-27 12:34 GMT   |   Update On 2017-04-27 12:34 GMT
அரியலூர் அருகே கிணற்றில் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது37) விவசாயி. இவர் கடந்த 19-ம் தேதி வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

இதனையடுத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் செந்த மிழ்செல்வன் கிடைக்கவில்லை. இந் நிலையில், வயல் பகுதிக்கு செந் தமிழ்செல்வன் உறவினர்கள் சென்றபோது கிணத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றில் பார்த்துள்ளனர். கிணற்றில் செந்தமிழ்செல்வன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செந்தமிழ்செல்வன் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து செந்தமிழ் செல்வன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன செந்தமிழ்செல்வனுக்கு ஜமுனா(25) என்ற மனைவியும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

Similar News