கூத்தாநல்லூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள குடிதாங்கி சேரியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 24). இவரும், திருவாரூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மகள் பிரேமாவும் ஆந்திரா பஞ்சு மில்லில் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணமாகி 5 மாதமான நிலையில் ஒரு டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது பிரேமாவை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும், பிரசவம் சிரமமாக இருக்கும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரேமா குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி அறிந்த பிரேமாவின் தந்தை முருகேசன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் கூத்தாநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.