செய்திகள் (Tamil News)

மத்திய அரசு பணிகளில் இந்துத்துவா ஆதரவாளர்களை நியமிக்க திட்டம்- மதிமுக உயர்நிலைக்குழு கண்டனம்

Published On 2018-06-11 07:53 GMT   |   Update On 2018-06-11 07:53 GMT
காலியாக உள்ள மத்திய அரசு துறைகளில் இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை பணியில் அமர்த்தும் பிரதமர் மோடி அரசு திட்டத்திற்கு ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை:

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* மத்திய அரசு நிர்வாகத்தில் நிதி, வருவாய், பொருளாதாரம், வேளாண்மை, கூட்டுறவு, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் இணை செயலாளர்கள் பதவிக்கு சமூக நீதியை சாகடித்து, சங்பரிவாரின் கொள்கை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை, மத்திய அரசுப் பணிகளில் அமர்த்தவே மோடி அரசு முடிவு செய்திருக்கின்றது.

அனைத்து முற்போக்கு எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும், சமூக நீதியில் அக்கறைக் கொண்டோரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க வேண்டும், கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.

* மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் இயக்கும் நிலை ஏற்பட்டால், மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் நடந்ததுதான் தூத்துக்குடியில் நடக்கும் என கழக உயர்நிலைக்குழு எச்சரிக்கின்றது.

* தமிழக மக்களின் கல்வி உரிமையை பறித்து, சமூக நீதியையும் குழிதோண்டி புதைத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வை அடாவடியாக திணிப்பதை ஏற்கவே முடியாது.

* மத்திய அரசு நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி. மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் போன்ற நெருக்கடிகளால் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கிட தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

* காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு பாதுகாப்பு கிடைக்க உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து, அரசியல் சட்ட அமர்வுக்கு பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த கடமையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #MDMK #Vaiko
Tags:    

Similar News