செய்திகள்

கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-13 17:21 GMT   |   Update On 2018-06-13 17:21 GMT
கோபி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்:

கோபி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோபி அருகே உள்ள மொடச்சூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகள் ஷர்மிலி (வயது 18). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஷர்மிலிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை என்று தெரிகிறது. ஷர்மிலி மனவேதனையில் இருந்து உள்ளார். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரமேசும், ரேவதியும் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டனர். ஷர்மிலி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது அவர் வீட்டின் விட்டத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷர்மிலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News