செய்திகள்
அரியாங்குப்பத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியாங்குப்பம்:
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சந்திப்பில் நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அரியாங்குப்பம் மணவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் சூர்யா என்ற எலி சூர்யா (வயது 20) என்பதும், ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து சூர்யாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.