மரக்காணம் அருகே கடற்கரையில் வாலிபர் பிணம்: அடித்து கொலையா? போலீசார் விசாரணை
மரக்காணம்:
மரக்காணம் அருகே உள்ளது கீழ்பேட்டை மீனவ குப்பம். இந்த பகுதியில் உள்ள கடற்கரையில் இன்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. இதனை அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
இதையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை செய்து கடற்கரையில் வீசி சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.