செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடைகள், பூங்கா அமைக்க இடங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2018-07-16 17:42 GMT   |   Update On 2018-07-16 17:42 GMT
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடைகள், பூங்கா அமைக்க இடங்களை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் பல்வேறு அரசுத்துறைகளின் மூலமாக விற்பனை கடைகள், பூங்கா, ஓய்வறை மற்றும் அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்த இடங்களை தேர்வு செய்வதற்காக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ஓய்வறை மற்றும் கழிவறைகள், தோட்டக்கலைத் துறை மூலமாக தோட்டக்கலை பூங்கா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக நரிக்குறவர்களுக்கு தனி விற்பனை வளாகம், ஆவின் பாலகம், காதி பொருட்கள் விற்பனை கடை, சித்த மருத்துவம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இதற்கான இடங்களை அண்ணா நுழைவு வாயில் அருகில், காஞ்சி சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில், இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில், குபேரலிங்கம் எதிரில், இலங்கை அகதிகள் முகாம் அருகில், அபயமண்டபம் சந்திப்பில், கோசாலை, வாயு லிங்கம் எதிரில், அடி அண்ணாமலை கிராமத்தில், வேடியப்பனூர், வீர ஆஞ்சநேயர் கோவில் எதிரில், ஆணாய்பிறந்தான் கிராமத்தில், செங்கம் சாலை சந்திப்பில், நகராட்சி சந்தை மேடு எதிரில் மற்றும் அரசு கலைக்கல்லூரி எதிரில் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுலவர் ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஆவின், தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags:    

Similar News