செய்திகள் (Tamil News)

வேலூர் சி.எஸ்.ஐ. தேவாலய மோதல் சம்பவத்தில் 12 பேர் கைது

Published On 2018-07-23 15:26 GMT   |   Update On 2018-07-23 15:26 GMT
வேலூர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் உறுப்பினர் தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்:

வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் உறுப்பினர் தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த மோதலை தொடர்ந்து காரில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் 2 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்து 12 பேரை கைது செய்தனர்.

வேலூர் அண்ணா சாலை சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் நேற்று காலை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த கூட்டத்தில் சி.எஸ்.ஐ. போதகர் சாது சத்யராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சர்ச்சில் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஸ்ரீதரன், வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ், தெற்கு இன்ஸ்பெக்டர் லோகநாதன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர்.

இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேவாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த விருதம்பட்டு இ.பி. காலனியை சேர்ந்த தேவா என்பவருக்கு சொந்தமாக காரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது காரில் ஒரு கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் துப்பாக்கி, வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து தேவா (வயது30) யோவான் (30) வேதாந்தம் (44) அன்புகிராண்ட் (28) சந்தோஷ் (28) ஆகிய 5 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஓல்டுடவுன் வடிவேலு (எ) இஸ்ரேல், சதீஷ்குமார், சந்தோஷ், ராமச்சந்திரன், பின்ட் மஞ்சுளா, திலீப் ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News