செய்திகள் (Tamil News)

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை தாக்கி நகை, பணம் கொள்ளை

Published On 2018-07-31 10:16 GMT   |   Update On 2018-07-31 10:16 GMT
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது60) விவசாயி. இவரது மனைவி சரோஜா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்கு சென்று விட்டார்.

பழனிச்சாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து பழனிச்சாமியை கடுமையாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இடைய கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமியை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News