தேனி அருகே கோவில் உண்டியல் உடைப்பு - அம்மன் நகைகள் கொள்ளை
உத்தமபாளையம்:
தேனி அருகே உத்தமபாளையம் அப்பிபட்டியில் பொம்மியம்மன் மற்றும் முத்துகருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். சம்பவத்தன்று கோவில் பூசாரி வழக்கம்போல் அம்மனுக்கு அலங்காரம் செய்ய வந்துள்ளார்.
அப்போது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்நிர்வாகிகள் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். #Robbery