செய்திகள் (Tamil News)

கள்ளிக்குடி அருகே நர்சிங் மாணவி கடத்தல்- வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2018-10-02 11:09 GMT   |   Update On 2018-10-02 11:09 GMT
நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள உன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சந்தனமாரி. இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

சம்வத்தன்று மாலை சந்தனமாரி கல்லூரி முடிந்து பஸ்சில் ஊருக்கு வந்தார். கள்ளிக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சந்தனமாரியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுட்டதாக கூறப்படுகிறது.

திடீரென்று அந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இதை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் பலனில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் தந்தை சந்திரன் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை ஆவல்சூரன் பட்டியைச் சேர்ந்த நாகார்ஜூன் என்பவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் குரசாமி-பஞ்சு, சகோதரி அழகு ஆகியோர் உள்ளனர்.

சந்தனமாரி குறித்து அவர்களிடம் சென்று கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மாணவியை கடத்திய நாகார்ஜூன், அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News