செய்திகள் (Tamil News)

தேனி அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை

Published On 2018-11-13 10:59 GMT   |   Update On 2018-11-14 04:34 GMT
தேனி அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள புலிக்குத்தி நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் ரம்யா (வயது23).

இவருக்கும் சருத்து பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரெங்கராஜ் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடித்து நேற்று காலை மணமக்கள் புலிக்குத்தியில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் பாண்டியன் மகளையும் மருமகனையும் அருகில் உள்ள பழமையான தந்தை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். மணமக்களை ரம்யாவின் உறவினர் முத்துகிருஷ்ணன் (27) என்பவர் அழைத்து சென்றார்.

அப்போது ரெங்கராஜிக்கு செல்போன் அழைப்பு வரவே மனைவியை முன்னே செல்லுமாறு கூறி விட்டு பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்றபோது மனைவி ரம்யாவும், உடன் வந்த அவரது உறவினர் முத்துகிருஷ்ணனும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டார். உடனே உறவினர்கள் ஓடிவந்து வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். முத்துகிருஷ்ணனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இரு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Tags:    

Similar News