செய்திகள்
தனியார் நிறுவன பெண் மேலாளரிடம் 16 பவுன் பறிப்பு- மர்ம நபருக்கு வலைவீச்சு
பெண்ணிடம் 16 பவுன் நகையை பறித்துச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை புட்டுத்தோப்பு ரோட்டைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி ஹேமலதா (வயது 42). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு தனது ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு ஹெல்மெட்டை கழற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர் திடீரென ஹேமலதா கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.
இது குறித்து ஹேமலதா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்தவனை தேடி வருகின்றனர்.