செய்திகள்
குளச்சலில் நகராட்சியை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகி திடீர் போராட்டம்
கழிவு நீரை அப்புறப்படுத்தாத நகராட்சியை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்:
குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை அருகே மழை நீர் கால்வாய் ஓடுகிறது. இக்கால்வாயில் ஓடும் நீர் பல நாட்களாக கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு, கொசு உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் குளச்சல் நகராட்சிக்கு புகார் கொடுத்தனர். மேலும் கழிவு நீரை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
காங்கிரஸ் கட்சியினரும் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை கழிவு நீர் அப்புறப்படுத்தப்பட வில்லை. இதையடுத்து இன்று காலை திடீரென காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு நகர தலைவர் டேவிட் குமார், கழிவு நீர் தேங்கி கிடக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் கொண்டுவந்த நாற்காலியை அதன் அருகே போட்டு அமர்ந்து கொண்டார். கையில் காங்கிரஸ் கொடியை பிடித்தபடி நகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
மேலும் குளச்சலில் நோய் பரப்பும் கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும், கொசு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.
இது பற்றி அறிந்த குளச்சல் நகரசபை கழிஷனர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகியுடன் சமரச பேச்சு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.