செய்திகள் (Tamil News)

பழனியில் தனியார் விடுதியில் தம்பதி போல் நடித்து எல்.சி.டி. டி.வி.க்கள் திருட்டு

Published On 2019-01-30 12:32 GMT   |   Update On 2019-01-30 12:32 GMT
பழனி தனியார் விடுதியில் தம்பதி போல் அறை எடுத்து தங்கி எல்.சி.டி. டி.வி.க்களை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பழனி:

பழனி பைபாஸ் ரோட்டில் இடும்பன் கோயில் எதிரே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கால் ஊனமுற்ற நபர் ஒருவரும் ஒரு பெண்ணும் வந்துள்ளனர்.

அங்கிருந்த பணியாளரிடம் கொடைக்கானலுக்கு காரில் சென்று விட்டு வரும்போது கார் ரிப்பேராகி விட்டதாகவும், அருகே உள்ள கார் மெக்கானிக்கிடம் வேலைக்கு விட்டுள்ளதாகவும் கூறி அவர்தான் இருசக்கர வாகனம் கொடுத்து உதவியதாகவும் தங்க அறை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பணியாளர் அதை நம்பி அறையை காட்டியபோது தங்களுடன் மகன்களும் வந்துள்ளதால் இரு அறை வேண்டும் என கேட்டுள்ளனர். இரு அறைகளுக்கான சாவியை கொடுத்த போது அறைகள் திருப்தியாக இருப்பதாக கூறிய அவர்கள் கலைஅழகன், கீழேவேளூர், நாகை என்ற பெயரில் பதிவு செய்து விட்டு உணவு வாங்கி வருமாறு பணியாளரை கேட்டுள்ளனர்.

அவர் உணவு வாங்க வெளியே சென்ற அடுத்த நிமிடம் தம்பதிபோல வந்த இருவரும் மின்னல் வேகத்தில் இரு அறைகளிலும் இருந்த எல்சிடி., டிவிக்களை எடுத்துக்கொண்டு அறையை பூட்டி வந்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பினர். உணவு வாங்கி வந்த பணியாளர் மாலை வரை அவர்கள் வராததால் மறுநாள் காலை விடுதி உரிமையாளரிடம் தகவல் சொல்லி அறையின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்த போதுதான் இருவரும் டி.வி.யை திருடி சென்றது தெரியவந்தது. 

விடுதியின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News