செய்திகள் (Tamil News)

பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் 39 வாகனங்களுக்கு தற்காலிக தடை - கலெக்டர் நடவடிக்கை

Published On 2019-05-15 17:59 GMT   |   Update On 2019-05-15 17:59 GMT
பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதால் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் 39 வாகனங்களை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
விருதுநகர்:

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படு கிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளின் 206 வாகனங்களில் 169 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளின் 174 வாகனங்களில் 138 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளை சேர்ந்த 307 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வு பணியை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார். வாகனங்களின் அவசர கால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா போன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:- பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 73 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும் சென்ற ஆண்டில் எந்த ஒரு விபத்தில்லாமல் பணியாற்றிய பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள தீயணைப்புக்கருவிகளை அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்காத 39 வாகனங்களை இயக்க தற்காலிக தடை விதித்தார்.

தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்களின் குறைபாடுகள் சரி செய்யப்பட்டவுடன் இயக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சந்திரசேகரன்(விருதுநகர்), ரவிச்சந்திரன்(ஸ்ரீவில்லிபுத்தூர்), வாகன ஆய்வாளர் இளங்கோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News