செய்திகள் (Tamil News)
முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்த பரணி கார்த்திகேயன்

தி.மு.க.வில் இணைந்த அதிமுக எம்எல்ஏவின் சகோதரர்

Published On 2019-09-03 08:29 GMT   |   Update On 2019-09-03 08:29 GMT
புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளரும், அதிமுக எம்எல்ஏவின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் இன்று திமுகவில் இணைந்தார்.
சென்னை:

புதுக்கோட்டை அ.ம.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தவர் பரணி கார்த்திகேயன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்னசபாபதியின் சகோதரரான இவர் கடந்த சில நாட்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் இருந்தார்.

இதனால் இவரை தி.மு.க.வுக்கு இழுக்க முன்னாள் அமைச்சர் ரகுபதி முயற்சி மேற்கொண்டார். பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைய சம்மதித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு பரணி கார்த்திகேயன் வந்தார். அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.

உடனே பரணிகார்த்திகேயன் தி.மு.க.வில் இணைவதாக விருப்பம் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடையும் அணிவித்தார். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்து பரணி கார்த்திகேயனை வரவேற்றார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த பரணி கார்த்திகேயன் கூறியதாவது:-

நான் புதுக்கோட்டை மாவட்ட அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகி இன்று முதல் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.



இருளில் உள்ள தமிழகத்துக்கு ஒளிவிளக்கு ஏற்றி ஏழை எளிய நடுத்தர மக்களின் உணர்வுகளை புரிந்து நடக்க கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது தலைமையின் கீழ் பணியாற்றிட முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் என்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News