செய்திகள் (Tamil News)
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சென்னை சிறுமிக்கு கொரோனா

Published On 2020-05-06 12:18 GMT   |   Update On 2020-05-06 12:18 GMT
புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சென்னை சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் ஏற்கனவே மிரட்டுநிலை பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை திரும்பினார். அவரை பிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் உள்ள கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர்.

அவரது ரத்தம், சளி மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர். இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை, வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் ஆகியோர் லட்சுமி நகர் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்ற முடிவு செய்து தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஆயங்குடி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை கோயம்பேடு, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 20 பேர் வந்திருந்தனர். அவர்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆயங்குடி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Similar News