செய்திகள் (Tamil News)
காங்கேயத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது
காங்கேயத்தில் ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:
காங்கேயம் அருகேயுள்ள சடையபாளையம் துண்டுக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி இவருடைய தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சிவக்குமார் நேற்றுகாலை தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டியில் இருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சிவக்குமார் ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது, மர்ம ஆசாமி ஒருவர் சிவக்குமாரின் ஆடுகளில் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக காடையூர் செல்லும் வழியில் சென்றுள்ளார்.
உடனடியாக சிவக்குமார் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த மர்ம ஆசாமியை துரத்தி சென்றார். பின்பு சிவக்குமார் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.ஆடு திருடிச்சென்றவரை காடையூர் அருகே சிவக்குமார் தனது நண்பர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து காங்கேயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் ஆடு திருடியவர் காங்கேயம்-திருப்பூர் சாலை நெய்கடை வீதியை சேர்ந்த குமரேசன் (வயது24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.