செய்திகள் (Tamil News)
சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக செல்லும் மாடுகள்.

சிவகாசி பகுதியில் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2020-12-11 11:53 GMT   |   Update On 2020-12-11 11:53 GMT
சிவகாசி பகுதியில் சாலையில் திரியும் ஆடு, மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பல இடங்களில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவைகளுக்கு போதிய உணவு வழங்க வசதி இல்லாத கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளை வீடு அல்லது தோட்டத்தில் கட்டி வைத்து வளர்க்காமல் நகர் பகுதியில் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். இவை நகர் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் தெருக்களில் கொட்டி வைக்கப்படும் குப்பைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சாப்பிட்டு வருகிறது.

இதுபோன்ற கால்நடைகளால் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாசில்தார் ஒருவர் கால்நடைகளின் திடீர் குறுக்கீட்டால் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயக்கம்காட்டும் நிலை தொடர்கிறது.

சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அதற்கு அபராதம் விதிக்க விதிகள் இருந்தும் அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது தான் வேதனையானது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News