செய்திகள் (Tamil News)
கைது

பென்னாகரம் அருகே மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது

Published On 2020-12-14 10:39 GMT   |   Update On 2020-12-14 10:39 GMT
பென்னாகரம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆணைக்கல்லனூரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி மதிமுனியம்மாள் (வயது 90). பெருமாள் இறந்து விட்டதால் மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ராஜா (32) என்பவர் தேவையான உதவிகளை செய்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா, மூதாட்டி அணிந்து இருந்த நகையை பறித்துள்ளார். அவர் சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த ராஜா மூதாட்டியை அடித்து கொலை செய்து விட்டு காதில் அணிந்து இருந்த ½ பவுன் தோட்டை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராஜா நேற்று சத்தியநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலிடம் சரணடைந்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், ராஜாவை பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் மூதாட்டியை அடித்து கொன்ற ராஜாவை கைது செய்தனர்.

Similar News