செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

Published On 2021-01-07 23:43 GMT   |   Update On 2021-01-07 23:43 GMT
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 866 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 415 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

16 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மேலும் 21 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 147 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 98 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.

மாவட்டத்தில் நேற்று 1,818 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த மாதம் 31-ந்தேதி சபரிமலையில் இருந்து ஊர் திரும்பிய நபர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 4-ந்தேதி நோய் பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. இவர்கள் அனைவரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இந்த குடும்பத்துடன் தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்கிறது.

எனவே பரிசோதனை முடிவுகளை உடனே தெரிவிக்கவும், பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

Similar News