செய்திகள் (Tamil News)
ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்ற என்ஜினீயர் கைது
ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக வேப்பேரியைச் சேர்ந்த பிரணவ்குப்தா (வயது 24), வட பழனியைச் சேர்ந்த பிரசாந்த் (25) ஆகிய இருவரை வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இவர்களில் பிரணவ்குப்தா என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.
இதேபோல சென்னை மாம்பலம் போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக சாகனாராம் (24) என்பவரை கைது செய்தனர். அம்பத்தூரில் உள்ள அவரது குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் எடையுள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.22 லட்சம் ரொக்கப்பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.