செய்திகள் (Tamil News)
தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக பப்பாளி சாகுபடி
குறிப்பாக குறைந்த தண்ணீர் தேவையுள்ள பப்பாளி விவசாயிகளின் முக்கிய தேர்வாக உள்ளது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில் வட்டப்பாத்தி அமைத்து சொட்டு நீர் பாசனம் வாயிலாகவே மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.நேரடி பாசன முறையை விட இம்முறையில், தண்ணீர் சேமிக்கப்படுவதால் அடுத்த கட்டமாக ஊடுபயிர் சாகுபடிக்கு முயற்சி மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக தோப்பில் 20-25 ஆண்டுகள் கடந்த தென்னை மரங்களுக்கு இடையே போதியளவு இடைவெளி இருப்பதுடன் சூரிய ஒளியும், மண்ணில் விழும் அளவுக்கு மரங்கள் வளர்ந்திருக்கும். எனவே அத்தகைய தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக குறைந்த தண்ணீர் தேவையுள்ள பப்பாளி விவசாயிகளின் முக்கிய தேர்வாக உள்ளது.பழம் விற்பனைக்கு மட்டுமல்லாது பப்பாளி பால் பெறப்படும் ரகங்களையும் நடவு செய்து பராமரிக்கின்றனர். பப்பாளி மரங்களுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைத்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
இவ்வாறு தென்னந்தோப்பில் ஊடுபயிர் செய்வதால் கூடுதல் வருவாய் மட்டுமல்லாது பல்வேறு பலன்கள் கிடைப்பதாக வேளாண்துறையினர் தெரிவிக்கின்றனர்.