செய்திகள் (Tamil News)
நண்பர் மூலம் சிக்க வைத்து தீர்த்துக்கட்டிய கொலையாளிகள்-தாராபுரம் வாலிபர் கொலையில் பரபரப்பு தகவல்
விக்னேஷ்க்கு தெரியாமல் எதிர்தரப்பிடம் பேசி வந்த கருப்பசாமி, விக்னேஷ் வருவது குறித்த விபரத்தை சங்கர் தரப்பை சேர்ந்த செல்வம் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளார்.
தாராபுரம்:
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 28). மதுரை உசிலம்பட்டியில் வசித்து வந்த இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருமலைப்பாளையத்தில் காலிமனை ஒன்றில் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்குப்பழியாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொலையாளிகள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வந்தனர். தாராபுரம் டி.எஸ்.பி., தனராசு தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் விக்னேஷ் கொலை தொடர்பாக விருதுநகரை சேர்ந்த விமல்(26), மனோஜ் (24), செல்வம்(25) மற்றும் ஒருவர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வாப்பட்டி நீதிமன்றத்தில் கே.டி.மணி மற்றும் பாஸ்கர் ஆகியோர் சரணடைந்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்னேஷின் அண்ணன் முத்துகாமாட்சி. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சுகன்ராஜ் என்பவரின் சித்திக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை தட்டிக்கேட்ட சுகன்ராஜின் கை, கால்களை முத்துகாமாட்சி வெட்டினார்.
இதையடுத்து சுகன்ராஜ் தரப்பை சேர்ந்த சங்கர், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் முத்துகாமாட்சியை கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழியாக செப்டம்பர் மாதம் சங்கரை, முத்துகாமாட்சியின் சகோதரரான விக்னேஷ் தரப்பினர் கொன்றனர்.
இதையடுத்து சங்கர் தரப்பை சேர்ந்த செல்வம் உள்ளிட்டோர் கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை மாதம் விக்னேஷ் தரப்பை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். முத்துகாமாட்சி கொலை வழக்கில் அ.தி.மு.க., நிர்வாகி சண்முகவேல் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். அவரை விக்னேஷ் தரப்பினர் வெட்டிக்கொன்றனர்.
இதையடுத்து மீண்டும் கொலை சம்பவம் நடைபெறாதவாறு இருக்க விருதுநகர் கிழக்கு போலீசார் 2 குழுக்களையும் கண்காணித்து வந்தனர். இருப்பினும் விக்னேஷ் தரப்பினர் சங்கர் தரப்பை சேர்ந்த சிலரை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இதையறிந்த சங்கர் தரப்பை சேர்ந்த செல்வம் , சுகன்ராஜ் உள்ளிட்டோர் விக்னேசை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 17-ந்தேதி நாகர்கோவிலில் இருந்த விக்னேஷ், கோவையில் உள்ள அவரது நண்பர் கருப்பசாமி அழைப்பின்படி, பஸ்சில் தாராபுரத்திற்கு புறப்பட்டார்.
விக்னேஷ்க்கு தெரியாமல் எதிர்தரப்பிடம் பேசி வந்த கருப்பசாமி, விக்னேஷ் வருவது குறித்த விபரத்தை சங்கர் தரப்பை சேர்ந்த செல்வம் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தாராபுரத்திற்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் அங்கு விக்னேஷ் வந்ததும் அவரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கைதானவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.