செய்திகள் (Tamil News)
உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் விரைவில் திறப்பு
தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ. 5 கோடியே 56 லட்சம் ஆகும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது .
இந்நிலையில் கடந்த 2014 - ம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் பின் 2019 டிசம்பர் மாதம் கட்டிட வேலை தொடங்கியது.
அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ..5 கோடியே 56 லட்சம் ஆகும். உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அங்கு சுமார் 70 - க்கும் மேற்பட்டோர் தங்கும் வசதியுடன் கூடிய விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடுமலைப்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள குடிமங்கலம், மடத்துக்குளம் ,கணியூர் ,காரத்தொழுவு உள்ளிட்ட பல்வேறு பகுதி மாணவ, மாணவிகள் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து பயன் அடைவார்கள்.