செய்திகள் (Tamil News)
பெரம்பலூரில் நடந்த முகாமில் பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய போது எடுத்த படம்.

சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 55,246 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-11-01 10:25 GMT   |   Update On 2021-11-01 10:25 GMT
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 55,246 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:

கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 7-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 240 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 343 இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர். முகாமை பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலத்தூர் ஒன்றியத்தில் நேற்று 3 ஆயிரத்து 373 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நடந்த முகாம்களை ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 6 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 7-வது கட்ட சிறப்பு முகாமில் 14 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 6 சிறப்பு முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 7-வது கட்ட சிறப்பு முகாமில் 41 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News