செய்திகள் (Tamil News)
திருப்பூர் அருகே கார் விபத்தில் நிதி நிறுவன அதிபர் மனைவி பலி
இன்று காலை 2 பேரும் காரில் வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
வெள்ளகோவில்:
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள பெரிய திருமங்கலத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி கோகிலாம்பாள் (41). இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு வந்தனர்.
இன்று காலை 2 பேரும் காரில் வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், சக்திவேல் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இதில் கோகிலாம்பாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சக்திவேலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கோகிலாம்பாள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.