செய்திகள்
வள்ளி - தெய்வானையுடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர்.

திருப்பூர் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2021-11-10 08:45 GMT   |   Update On 2021-11-10 08:45 GMT
உடுமலைபிரசன்ன விநாயகர் மற்றும் விசாலாட்சிஅம்மன் சன்னதிகளில் சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கி வரும் நிகழ்ச்சி நடந்தது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சண்முகநாதர் சுவாமி அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன் ஆகியோரை வதம் செய்த பிறகு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சுவாமி வெற்றி வாகை மாலை சூடுதல், சேவல்கொடி சாற்றுதல் மற்றும் சுவாமியை சாந்தப்படுத்தும் விதமாக உற்சவருக்கும், மூலவருக்கும் மகா அலங்காரம், மகா அபிஷேகம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இன்று காலை சண்முகநாதர்- தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உடுமலைபிரசன்ன விநாயகர் மற்றும் விசாலாட்சிஅம்மன் சன்னதிகளில்  சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கி வரும் நிகழ்ச்சி நடந்தது. 

இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கஜமுகாசூரன், பத்மாசூரன், பானுசூரன், சிங்கமுகசூரன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார்.

உடுமலையில் சூரசம்ஹாரம் விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நகர முக்கிய வீதிகளில் நடைபெறும். ஆனால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கடந்த ஆண்டைப்போன்று சூரசம்ஹார விழா, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடந்தது. பக்தர்கள் தரிசிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில் உட்பட பல்வேறு முருகன் கோவில்களில் இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

கந்தசஷ்டி - சூரசம்ஹார நிகழ்ச்சி, திருக்கல்யாண நிகழ்ச்சியை காண இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் சற்று கவலையடைந்தனர். 
Tags:    

Similar News