இந்தியா

காங்கிரசும் பாகிஸ்தானும் எப்போதும் ஒரே பக்கம்தான்: அமித் ஷா கடும் தாக்கு

Published On 2024-09-19 21:21 GMT   |   Update On 2024-09-19 21:21 GMT
  • காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
  • பாகிஸ்தான் மந்திரியின் இந்தக் கருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

பாகிஸ்தான் ராணுவ மந்திரியாக இருந்து வரும் கவாஜா ஆசிப் பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது அந்தக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கூட்டணியும் ஒரே பக்கத்தில் நிற்கின்றன என தெரிவித்தார். அவரது கருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஆதரவு தெரிவிப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் காங்கிரசை அம்பலப்படுத்தியுள்ளது.

காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கம், ஒரே திட்டம் இருப்பதை அந்நாட்டு ராணுவ மந்திரியின் கருத்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

ராகுல் கடந்த சில ஆண்டுகளாக தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆதாரம் கேட்டார். இந்திய ராணுவத்துக்கு எதிரான விஷயங்களைப் பேசினார். இப்படி ராகுலின் காங்கிரசும், பாகிஸ்தானும் எப்போதும் ஒரே மாதிரி செயல்படுகின்றன.

ஆனால், மத்தியில் மோடி அரசு இருப்பதை காங்கிரசும், பாகிஸ்தானும் மறந்துவிட்டன. எங்கள் ஆட்சியில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தோ அல்லது பயங்கரவாதமோ மீண்டும் வரவே வராது என உறுதியாக தெரிவித்தார்.

Tags:    

Similar News