செய்திகள்
குடும்ப நல நிதியை உயர்த்த ஓய்வூதியர்கள் கோரிக்கை
இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் சலுகைகள் பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகளை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காங்கயம்:
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க காங்கயம் வட்டக் கிளை கூட்டம் வெள்ளக்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் உடுமலை வட்டக்கிளைத்தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வேலுசாமி, காங்கயம் வட்டக்கிளை செயலாளர் சதாசிவம் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஜூலை 2020 முதல் தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
கூடுதல் சந்தா தொகை பிடித்தம் செய்வதைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியர்கள் குடும்ப நல நிதியை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் சலுகைகள் பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நடந்த காங்கயம் கிளை சங்க புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக ஆறுமுகம், செயலாளராக சதாசிவம், பொருளாளராக விஸ்வநாதன், துணைத்தலைவராக என்.கே.சுப்பிரமணியன், இணைச் செயலாளராக சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.