செய்திகள் (Tamil News)
கோப்புபடம்.

தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் - நல்லசாமி பேட்டி

Published On 2021-11-12 08:43 GMT   |   Update On 2021-11-12 08:43 GMT
தமிழ்நாட்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து 2022 ஜனவரி 21 - ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.
வெள்ளகோவில்:

தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெள்ளக்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கள்ளுக்கான தடை அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைக்கும் எதிரானதாகும். உலக அளவில் தமிழ்நாட்டைத் தவிர எந்த ஒரு நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. 

கள் விடுதலை வேண்டி 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு கள் இயக்கம் போராடி வருகிறது. கள் தடையை நீக்க இதுவரை ஆண்ட மாநில அரசுகள் முன்வரவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் பெரும் வருமானமே ஆகும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இதில் மாற்றமில்லை. இதர மதுபானங்களைவிட கள் கேடுவிளைவிக்கும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது பயனற்றுப் போய்விட்டது.

தமிழ்நாட்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து 2022 ஜனவரி 21-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தவர்களையும், கள் விடுதலையை ஏற்கும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்த அறப்போராட்டம் நடத்தப்படும். 

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் வெற்றியில் முடிந்ததைப் போல, இந்தப் போராட்டமும் வெற்றியடையும். மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு 2021-ம் ஆண்டு இறுதிக்குள் கள்ளுக்கான தடையை நீக்கி அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார். 

Tags:    

Similar News