செய்திகள் (Tamil News)
பட்டா ஆவணங்கள் ரத்து-ஜம்புக்கல் மலையை மீட்க அதிரடி நடவடிக்கை
அரசு நிலம் 15.86 ஏக்கரை கிரையம் செய்த குவாரி அதிபர் ஒருவர் ஒட்டுமொத்த மலையை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆண்டியகவுண்டனூர் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியாக 4,000 ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலைத்தொடர் உள்ளது.
இங்கு சமநிலப்பகுதியில் ஏழை மக்கள் விவசாயம் செய்யவும், ஆடு, மாடு மேய்த்துக்கொள்ளவும் அனுமதியளித்து 350 ஏக்கர் நிலம் 300க்கும் மேற்பட்டோருக்கு நிபந்தனை பட்டாவாக வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அரசு நிலம் 15.86 ஏக்கரை கிரையம் செய்த குவாரி அதிபர் ஒருவர் ஒட்டுமொத்த மலையை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் அரசு நிபந்தனை அடிப்படையில் வழங்கிய பட்டாவை சட்ட விரோதமாக விற்பனை செய்தது மற்றும் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் தனி நபர் விலைக்கு வாங்கி அரசுக்கு சொந்தமான மலையை ஆக்கிரமித்தது குறித்து உடுமலை ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., கீதா கூறியதாவது:-
அரசு நிலத்தை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நிபந்தனை பட்டா வைத்துள்ளவர்கள், விற்பனை செய்திருந்தாலோ, குத்தகை அடிப்படையில் உரிமம் மாற்றியிருந்தாலோ அந்த ஆவணங்கள் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனைகளும் ரத்து செய்யப்படும்.
அரசு அனுபவ உரிமை வழங்கிய நிலம் அவர்களுக்கு தேவையில்லை என கருதி அந்நிலங்கள் அனைத்தும் உபரி நிலமாக மாற்றப்பட்டு வீட்டு மனை, விவசாய நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.