செய்திகள் (Tamil News)
வானிலை நிலவரம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்தது- வியாழக்கிழமை ஆந்திரா கடலோரத்தை கடக்கும்

Published On 2021-11-15 05:47 GMT   |   Update On 2021-11-15 05:47 GMT
வடகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிக பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 13-ந்தேதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அந்தமான் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்தது.

இன்று காலை இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவடைந்து வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

இது மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் (17-ந்தேதி) வலுவடைகிறது.

இது வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) தெற்கு ஆந்திர கடலோரத்தை கடக்கிறது. இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News