உள்ளூர் செய்திகள்
ஆட்டை பாரதீய ஜனதா கட்சியினர் பலி கொடுத்தனர்

காங்கிரஸ் பெயர் சூட்டிய ஆட்டை பலி கொடுத்த பாரதீய ஜனதா கட்சியினர்

Published On 2022-01-08 11:23 GMT   |   Update On 2022-01-08 11:23 GMT
மதுரை மதுரை பாண்டி கோவிலில் காங்கிரஸ் பெயர் சூட்டிய ஆட்டை பாரதீய ஜனதா கட்சியினர் பலி கொடுத்தனர்
மதுரை

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் பிரதமர் மோடி நலமுடன் வாழ வேண்டி நாடு முழுவதும் கோவில்களில் யாகம் வளர்த்து வருகின்றனர்.

மாநில பா.ஜ.க. இளைஞர் அணி  செயலாளர் சங்கரபாண்டியன் நிர்வாகிகளுடன் மதுரை பாண்டி கோவிலுக்கு வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் வழிபாடு நடத்த தடை உள்ளதால், சன்னதி வாசலில் சூடம் ஏற்றி பிரதமர் நரேந்திர மோடி நலம் பெற வேண்டி வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஆட்டுக்குட்டி வரவழைக்கப்பட்டது. அதன் தலையில் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ என்ற வாசகத்துடன் கை சின்னத்தை நிர்வாகிகள் அணிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த ஆடு பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு பயிடப்பட்டது. அதன் பிறகு பா.ஜ.க.வினர் ஆடுக்கறியை சமைத்து பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கினர்.

இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறுகையில், பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாத காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எங்கும் இருக்கக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில், ஆட்டின் தலையில் காங்கிரஸ் கட்சி பெயர், சின்னத்தை அணிவித்து பலி கொடுத்தோம் என்றார்.

பா.ஜ.க. இளைஞர் அணியை சேர்ந்த பிரவீன், நீலமேகம், ராஜேஷ்குமார், பட்டியல் இன மாநில நிர்வாகி சிவாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News