உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வீட்டு முற்றங்களில் தானியங்களை தூவ வேண்டும் - இயற்கை கழக நிறுவனர் அறிவுறுத்தல்

Published On 2022-01-24 09:58 GMT   |   Update On 2022-01-24 09:58 GMT
செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால், சிட்டுக்குருவியினம் அழிகிறது என்ற கூற்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
திருப்பூர்:

சிட்டுக்குருவிகளின் உணவு தானியம் என்றாலும் நலனில் கவனம் அக்கறை கொண்ட சிட்டுக்குருவிகள் தன் வாரிசுகளின் வேகமான வளர்ச்சிக்கு புரத சத்து அவசியம் என்பதை இயற்கையாகவே உணர்ந்துள்ளன. அதனால், விளை நிலங்களை தேடிச் சென்று, அங்குள்ள புழு, பூச்சிகளை எடுத்து வந்து தன் குஞ்சுகளுக்கு வழங்கும். இதன்மூலம், விளைநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் புழு, பூச்சிகளின் எண்ணிக்கை குறையும்.

இது  ‘பயிர் பாதுகாப்பு’ என்ற மாபெரும் விஷயத்துக்கு மறைமுக பலன் தந்துக்கொண்டிருந்தது. காடுகளில் உள்ள மரங்களிலோ, மனிதர்களின் சுவாசம் இல்லாத இடங்களிலோ சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதில்லை. மாறாக  மனிதர்களை அண்டித்தான் அவை வாழும், என்கிறார் திருப்பூர் இயற்கை கழக நிறுவனர் ரவீந்தரன்.

மேலும் அவர்கூறியதாவது:

செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால், சிட்டுக்குருவியினம் அழிகிறது என்ற கூற்று  அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அவற்றின் வாழ்விடமான ஓட்டு வீடுகளும், ஓலை குடிசைகளும் இன்று கான்கிரீட் கட்டடங்களாக உருமாறிவிட்டன.

கலாச்சார மாற்றத்தால் சிட்டுக் குருவிகளின் வாழ்வாதாரமான சிறு தானிய பயன்பாடு இல்லாமல் ஆகிவிட்டது. விளை நிலங்களில் அளவுக்கதிகமாக தெளிக்கப்படும் ரசாயன உர பயன்பாட்டால் அங்கிருந்து தன் குஞ்சுகளுக்கு உணவாக எடுத்து வரும் புழு, பூச்சிகள் விஷத்தன்மை நிறைந்ததாக மாறிவிட்டன. சுருங்கச் சொன்னால் சிட்டுக்குருவிகள் தன் வாழ்விடத்தை இழந்து, வாழ்வாதாரத்தை தொலைத்திருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

வீடு, அலுவலகங்களின் முற்றங்களில் அட்டை பெட்டியோ, முகப்பில் துளையிடப்பட்ட பானை போன்றவற்றை தொங்கவிட்டு சிறிதளவு தானியங்களை தூவிவிட்டால் போதும். சிட்டுக்குருவிகள் தங்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்கி கொள்ளும் என்றனர். 
Tags:    

Similar News