உள்ளூர் செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய லாரியையும், பலியான செல்வத்தையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: விசைத்தறி தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2022-02-16 04:08 GMT   |   Update On 2022-02-16 06:56 GMT
திருப்பூர் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விசைத்தறி தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 26). இவர் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தங்கியிருந்து விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை பிரதீப் அவரது உறவினர் பழனியம்மாள் (50) மற்றும் பழனியம்மாளின் மகன்கள் சஞ்சய் (14), சரவணன் (12) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சுல்தான்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

இதில் 4பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனியம்மாள், சஞ்சய், சரவணன் ஆகியோர் காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் இறந்தார். சஞ்சய், சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் விசைத்தறி தொழிலாளி மற்றும் பெண் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News