உள்ளூர் செய்திகள்
பலி

வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2022-02-20 09:59 GMT   |   Update On 2022-02-20 09:59 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வெளிகாண்ட்லா குளிப்பாட்டிபள்ளியை சேர்ந்தவர் ஜெயபால்சன்(வயது 18), கர்னூல் மாவட்டம் ஆர்.எஸ்.ரங்காபுரத்தை  சேர்ந்த பிரவீன் (18), கோதாவரி மாவட்டம் துனியை சேர்ந்த மனோஜ் (18). 

இவர்கள் 3 பேரும்  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஜெயபால்சன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் முதலாம் ஆண்டு பி.டெக்கும், பிரவீன் முதலாமாண்டு என்ஜினீயரிங்கும் படிக்கின்றனர். 

அவர்கள் 3 பேரும் கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் தனியாக தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். நேற்று இரவு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். 

பல்கலைக்கழக வளாகத்தின் அருகே உள்ள லிங்கா பள்ளி முன்பு வந்தபோது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வத்திராயிருப்பு நோக்கி சென்ற மில் வேன் மோதியது. 

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மாணவர் ஜெயபால்சன்  சம்பவ இடத்திலேயே பலியானார். பிரவீன், மனோஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் பிரவீனின் அண்ணன் மனோஜ் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் 3ம் ஆண்டு படிக்கிறார். விபத்து குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News