வானூர் அருகே மோட்டார் கொட்டகையில் மின் வயர் திருடிய வாலிபர் கைது
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ராயபுதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் டயாநிதி (வயது 38). இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று மாலை டயாநிதி தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு சென்றபோது விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் இருந்த மின் வயர்களை 3 வாலிபர்கள் திருடிக் கொண்டு இருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த டயாநிதி மோட்டார் கொட்டகைக்கு வேகமாக சென்றார்.
இவர் வருவதை அறிந்த 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்து ஓடினர். இருந்தபோதிலும் டயாநிதி மற்றும் அவர் நிலத்திற்கு அருகே உள்ள பிற நிலத்தவர்களின் உதவி கொண்டு மூன்று வாலிபர்களில் ஒரு நபரை பிடித்தனர். மீதமுள்ள 2 பேர் தப்பி ஓடினர்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புதுவை மாநிலம் ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பிரியன், ஸ்ரீதர், சஞ்சய் என தெரியவந்தது. மேலும் இவரிடமிருந்து திருடிய 7000 மதிப்புடைய மின் வயரை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் தப்பி ஓடிய 2 நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் வேறு இடங்களில் இது மாதிரி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுளளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.