உள்ளூர் செய்திகள் (District)
நிலக்கோட்டையில் சூறைக்காற்றுடன் மழை- மரம் விழுந்து அரசு ஆஸ்பத்திரி காம்பவுண்டு சுவர் சேதம்
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மரம் முறிந்து விழுந்ததால் காம்பவுண்டு சுவர் சேதமடைந்தது. இதேபோல் போலீஸ் நிலையத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
நிலக்கோட்டை:
கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நிலக்கோட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. துள்ளுப்பட்டியில் முனியம்மாள் என்பவர் வீடு மீது வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மரம் முறிந்து விழுந்ததால் காம்பவுண்டு சுவர் சேதமடைந்தது. இதேபோல் போலீஸ் நிலையத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது. கோடைமழை குளிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கொைடக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழை கோடைவிழாவை வரவேற்கும் வண்ணம் இருந்தது. மதியம் சாரலாக தொடங்கிய மழை 4 மணிநேரம் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் சீரமைத்தனர்.